சூதக வலிக்கு முருங்கைப்பூ - தமிழர்களின் சிந்தனை களம் சூதக வலிக்கு முருங்கைப்பூ - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, November 30, 2013

    சூதக வலிக்கு முருங்கைப்பூ

    சூதக வலிக்கு முருங்கைப்பூ

    பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில், வலியுடன் கூடிய மாதாந்திர உதிரப்போக்கை 'சூதக வலி’ அல்லது 'டிஸ்மெனோரியா’ என்கிறோம். இத்தகைய வலியால், பெண்கள் அன்றாட வேலைகளைக்கூடச் செய்ய முடியாமல் பாதிப்படைவார்கள். 

    காரணங்கள்:

    எந்தக் காரணமும் இன்றி, சாதாரணமாக மாதாந்திர உதிரப் போக்கு ஆரம்பிக்கும்போது ஏற்படும் வலி, முதல் வகை. இந்த வலி அதிகரிக்கும்போது, 'புரொஸ்டாகிளாண்டின்ஸ்’ (prostaglandins) என்னும் ஹார்மோனால் பிரச்னை ஏற்படுகிறது. கருப்பை நோய்கள், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் உறுப்புகளில் நோய்கள், பால்வினை நோய்கள் மற்றும் கருத்தடை சாதனங்களாலும், மன அழுத்தத்தாலும் ஏற்படுவது இரண்டாம் வகை வலி. 

    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

    கரியபோளம், பொரித்த பெருங்காயம் இரண்டையும் சம அளவு எடுத்து, தேன்விட்டு அரைத்து அதை மிளகு அளவுக்கு உண்ணலாம். சாதிக்காய், திப்பிலி, சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் மோரில் கலந்து அருந்தலாம். சதகுப்பை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து உண்ணலாம். மலை வேம்பு வேர்ப்பட்டைப் பொடி கால் ஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து உண்ணலாம். பாகல் பழச்சாறு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம். ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறை, கால் ஸ்பூன் மிளகுப்பொடி கலந்து உண்ணலாம்.

    புதினா இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம். முருங்கைப்பூவை நெய் விட்டு வதக்கி உண்ணலாம். மாசிப்பத்திரி இலைச்சாறு 15 மில்லி அருந்தலாம். கைப்பிடி அளவு ஆடாதொடை இலையில் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம். கால் ஸ்பூன் குங்குமப்பூவை எலுமிச்சம் பழச்சாறு, நீர் சேர்த்து அருந்தலாம். ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.

    ஒரு டேபிள்ஸ்பூன் மூங்கில் இலைச்சாறை நீரில் கலந்து உண்ணலாம். எள் விதையை அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து உண்ணலாம். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து மோரில் கலந்து அருந்தலாம். ஒரு ஸ்பூன் இஞ்சிச்சாறுடன், சிட்டிகைப் பெருங்காயம் சேர்த்து மோரில் அருந்தலாம். முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி அடிவயிற்றில் பற்றுப் போடலாம். சிற்றாமணக்கு இலையை, சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி அடிவயிற்றில் பற்றிடலாம். நொச்சி இலையை நீரில் போட்டுக் காய்ச்சி, இடுப்புப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். 

    உணவு:

    சேர்க்க வேண்டியவை: வாழைப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், வால்நட், பசலைக்கீரை, ஓட்ஸ், கோதுமை, கொட்டை வகைகள்.
    தவிர்க்க வேண்டியவை: மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு, எண்ணெய்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சூதக வலிக்கு முருங்கைப்பூ Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top