ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை - தமிழர்களின் சிந்தனை களம் ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, September 13, 2014

    ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை


    ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை 
    எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள். 


    அப்படி இருக்கக்கூடாது. என்ன நோய்க்கு, என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக முதல்-உதவி தினமாகக் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) உலக முதல் உதவி தினமாகும். 

    இதை முன்னிட்டு நீங்கள் தெரிந்து கொள்ள சில முதல் உதவி தகவல்கள்... 

    ஆஸ்த்துமா:- 

    கடினமான மூச்சு, சத்தத்துடன் சுவாசம் விடுதல். மூச்சிழப்பு ஏற்படுதல், இருமல் வரலாம். மார்பு இருக்கமடைந்து சுவாசம் கடினமாதல், பேச முடியாமை, உதடு, முகம்-நீல நிறமாதல். 

    சிகிச்சை:- 

    சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின் மீது முதுகு நேராக இருக்கும்படி உட்கார வைக்கவும். கொஞ்சம் முன்பாக சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால் மேசை மீது கைகளை ஊன்றி உட்கார வைக்கவும். அவரிடம் உறிஞ்சும் மருந்து இருந்தால் ரசாயனக்கலவை வரும்படி அதனை திருகி-வாயில் வைத்த 3 அல்லது 4 முறை உள்ளே உறியச் சொல்லவும். 

    மருந்து ஏதும் இல்லையெனில் அல்லது மேற்சொன்ன முறையில் பலனில்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும். 

    மின்சாரம் தாக்குதல்:- 

    சுவாசமும் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு சுய நினைவு இழத்தல். மின்சாரம் நுழைந்த - வெளிப்பட்ட இடங்களில் தீக்காயங்கள். 

    சிகிச்சை:- 

    சுவிட்ச் தெரிந்தால் - அணைத்து விடவும். இல்லையெனில் மரக்கட்டை போன்ற மின்சாரம் புகாத பொருள்கொண்டு மின் இணைப்பிலிருந்து அவரைத் தொடாமல் அப்புறப்படுத்தவும். சுய நினைவு இழந்திருந்தால் - சுவாசமும் ரத்த ஓட்டமும் உள்ளதா? என்று கண்டறிந்து உடனே சி.பி.ஆர். கொடுக்க தயாராக இருக்கவும். 

    தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஈரத் துணியை 10 நிமிடம் வைத்து பிறகு உலர்ந்த துணியால் மூடி கட்டுப் போடவும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும். 

    நீரில் மூழ்குதல்:- 

    சுவாசத்தடையும், உடல் குளிர்ந்து போதலாலும் உயிரிழக்க நேரிடும். தக்க பாதுகாப்பு முறைகளை கையாண்டு நீரில் மூழ்கியவரை வெளியில் கொண்டு வரவும். தரையில் இரண்டு கால்களுக்கு இடையில் குப்புற படுக்க வைக்கவும். உங்கள் இரண்டு கைகளால் வயிற்றுப் பாகத்தில் தூக்கவும். 

    இரண்டு, மூன்று தடவைகள் அவ்வாறு தூக்கி இறக்கினால் நீரும் தொண்டையில் உள்ள அடைப்புகளும் நீங்கும். பிறகு அவரை மல்லாந்து படுக்க வைத்து, வாய், நாசிதுவாரங்களை சுத்தம் செய்து, சி.பி.ஆர். முறையைக் கையாளவும். அருகில் உள்ளவர்கள் ஈரத்துணிகளை கழற்றி எடுத்து விட்டு உலர்ந்த துணியால் கீழும் மேலும் முழு உடலையும் சுற்றி வைக்கவும். 

    மூச்சுக் குழாய் வழியாக நீர் செல்லும்போது அவை பாதிக்கப்பட்டு வீக்கமடைந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பிறகு, சுவாசக் குழாயை அடைத்து தடையை உண்டாக்கும். ஆகவே அவரை மருத்துவமனையில் முதல் உதவி கொடுத்தப் பின் சேர்க்க வேண்டும். நீரில் மூழ்கி சுயநினைவு இழந்தவர்கள் அவசியம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும். 

    எலும்பு முறிவு:- 

    பாதிக்கப்பட்ட இடத்தில் வலி (முக்கியமாக அசை ஏற்பட்டால்) சில நேரங்களில் உருமாறி, வீக்கமும் ஏற்பட்டிருக்கும். ரத்தக்கட்டு உண்டாகியிருக்கும். அசைவுகள் பாதிக்கப்பட்டு, எலும்பு அசைந்தால் தாங்க முடியாத வலி உண்டாகும். 

    சிகிச்சை :- 

    அசைவு கொடுக்காமல் இருக்கச் சொல்லவும். உடைந்த எலும்புக்கு மேலும் கீழும் உள்ள மூட்டுகள் அசையா வண்ணம் ஆதரவு கொடுத்து கட்டு போடவும். மேல்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் தூக்குகள் மூலமாக அவர்களுக்கு அந்த எலும்புகளுக்கு ஆதரவு கொடுக்கவும். 

    கீழ்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் சிம்புகள் வைத்து கட்டு போடவும். முக்கியமாக இரு கால்களையும் பாதங்களையும் சேர்த்து வைத்து 8 வடிவகட்டு போடவும். 

    சுளுக்கும் - சதை பிடிப்பும்:- 

    வலி, மூட்டின் அசைவுகள் குறைந்தும், வீக்கம், ரத்தக்கட்டு ஏற்படும். 

    சிகிச்சை:- 

    ஆர்.ஐ.சி.இ. ஆர்-ஓய்வு, ஐ-பனிக்கட்டி, ஈரத்துணி, சி-அழுத்தமான கட்டு, இ-உயர்த்திப் பிடித்தல். பாதிக்கப்பட்ட இடத்திலுள் இருக்கமான ஆடை, காலணிகள் எடுத்து விடவும். அந்த இடத்தின் மீது அதிக பளுவு தாங்கும்படியாக வைக்க வேண்டாம். ஓய்வு கொடுக்க வேண்டும். 

    பனிக்கட்டி ஒரு துணியில் சுற்றியோ அல்லது ஈரத் துணியோ வீக்கத்தின் மீது வைத்து இறுகக்கட்டு போடவும். அதிகமாக இறுக்க வேண்டாம். உயர்த்தி வைத்து ஆதரவு கொடுக்கவும். 20 நிமிடத்துக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டை ஈரமாக வைத்துக் கொள்ளவும். 

    மருத்துவ உதவிக்கு நாடவும். கை, கால் வலிப்பு (காக்காய் வலிப்பு):- 

    கை, கால்கள், உடலும் முறுக்கினால் போல் இருக்கும். குழப்பம், கை கால்கள் வலிப்புடன் அசைந்து காணப்படும், சுவாசம் முரடாக இருக்கும்; பற்களை கடித்துக் கொண்டு சில நேரங்களில் நாக்கும் கடிபட்டு இரத்தம் சேர்ந்து நுரை கலந்த எச்சில் வெளிப்படும்; சுயநினைவு இழந்தும் காணப்படுவார்கள். 

    சிகிச்சை:- 

    கீழே விழும் பொது தாங்கிப் பிடித்த தலையில் அடிபடாமல் படுக்க வைக்கவும். தலைக்கடியில், கை, கால்கள் அசையும் போது தரையில் உராய்ந்து காயங்கள் ஏற்படாமல் இருக்க துணிகளைப் போடவும். அருகில் உள்ள பொருட்கள் மீது கை, கால்கள் படும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அவைகளை அப்புறப்படுத்தவும். கை, கால்களை பிடித்துக் கொள்ள வேண்டாம். 

    கழுத்தில் மார்பில் உள்ள துணிகளை தளர்த்தி விடவும். வலி நின்றவுடன் சுயநினைவு இழந்திருந்து, சுவாசமும் இரத்த ஓட்டமும் இருந்தால் அவர்களை மீட்பு நிலையில் படுக்க வைக்கவும் பற்களுக்கு இடையில் எதையும் வைக்க முயல வேண்டாம். 

    பக்கவாதம்:- 

    மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டாலோ அல்லது ரத்தம் அழுத்தம் காரணமாக மூளை ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் பரவி அமுக்குதல் ஏற்படும். முகத்தில் வலுவிழந்த நிலை (சிரிக்க முடியாமை), கை, கால்களில் சோர்வு, நாக்கு குழறுதல்-பேச்சில் குழப்பம், தள்ளாட்டமுடன் நடை, கண்களில் பார்வை பாதிப்பு, தாங்க முடியாத தலைவலி, போன்றவை ஏற்படும். 

    சிகிச்சை:-

    இந்த அறிகுறிகள்- தெரிந்தவுடன்-நேரத்தை குறித்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். வாயில் வரும் எச்சில் போன்றவற்றை துடைத்து விட்டு தலையை உயர்த்தி தலையணை மீது படுக்கவைக்கவும். டோலியில் எடுத்துச் செல்லவும். 

    இதயக் கோளாறுகள் 

    மார்பு வலி:- மார்பின் அடிபாகத்தில் பிழிவது போன்ற வலி எடுத்து அது மேல் நோக்கி பரவுது போல் தெரியும்- தாடை- கைகள் வழியாக வலி, நடுக்கம் கைகளில் எடுக்கும். சுவாசமும் கடினமாகும். திடீரென்று வலு விழந்தது போல் தோன்றும். 

    மேல் மூச்சு வாங்கும். சிகிச்சை:-உடனே உட்கார வைத்து கழுத்து மார்பு, இடுப்பிலுள்ள துணிகளை தளர்ச்சி நிதானமாக ஆழ்ந்த மூச்சு வாங்கும்படி சொல்லவும். தைரியம் சொல்லி ஆசுவாசப்படுத்தவும். அவரிடம் ஏதாவது மாத்திரை இருந்தால் நாக்குக்கு அடியில் வைத்து சாரினை உறிஞ்சும் படி சொல்லவும். 

    அல்லது ஆவியாக இரசாயன கலவை இருந்தால் அதனை உறிஞ்சச் சொல்லவும். ஓய்வுக்குப் பின் வலிகுறைந்தால் அவர் செய்து கொண்டிருந்த வேலைகளை நிதானமாக செய்யச் சொல்லவும். மறுபடியும் வலி உண்டானால் மருத்துவரை நாடவும்.

    இதயத்தில் திடீரென்று கோளாறு:- 

    அடிப்பாகத்தில் பிழிவது போன்று எடுக்கும் வலி நேரமாக அதிகரித்துக் கொண்டே போகும். இடது தாடை-இடது கை, சில நேரங்களில் வலது பக்கமாக ஓடுவது போல் தோன்றும். மார்பு இறுக்கமடைந்து சுவாசம் விடுவது கடினமாகும். மயக்கமும் தலைசுற்றலும் ஏற்படும். 

    தனக்கு ஏதோ ஆபத்து நிகழ இருக்கென்ற அச்சம் உண்டாகும். முகம் வெளுத்து, உதடுகள் நீலமாக காணப்படும். வழுவிழுந்த, ஒழுங்கீனமான வேகமான நாடி; அதிக அளவு வியர்த்து கொட்டுதல்; காற்றுக்கு கதறுவது போல் ஆழ்ந்த சுவாசம், குழப்பம்-கை, கால், விரல்களிலிருந்து குளிர்ந்து கொண்டே இதயம் நோக்கி வரும். குமட்டல், வாந்தி உண்டாகும் கைகள் நடுங்கும். 

    சிகிச்சை:- 

    மருத்துவ ஊர்திக்கு அழைப்பு கொடு; அவரிடம் ஏதாவது மருந்து இருந்தால் உடனே கொடுக்கவும். தைரியம் சொல்லி ஊக்கம் அளிக்கவும் ஓய்வு எடுக்கச் சொல்லவும். 

    பின்புறமாக சாய்ந்து உட்கார வைத்து கழுத்து, மார்பில் உள்ள துணிகளை தளர்த்தவும், முட்டியை மடக்கி தொடைகளுக்கு அடியில் தலையணைகளை வைக்கவும். மருந்து ஏதும் இல்லையெனில் ஒரு ஆஸ்பிரின் (300கிராம்) மாத்திரை அவர் நாக்குக்கு அடியில் வைத்து உறிஞ்சி சாரை விழுங்கச் சொல்லவும். ஊர்திக்கு செல்ல நடக்காமல் உட்கார வைத்து எடுத்துச் செல்லவும். ஊர்தியினுள் சாய்ந்து உட்கார்ந்தபடியே அழைத்துச் செல்லவும். 

    நாய்கடி:- 

    வெறி நாய் எச்சலில் ``ரேபிஸ்'' என்ற மிகச் சிறிய கிருமிகள் மனித நரம்பு மண்டலத்தையும் மூளையினையும் தாக்கி உயிரை போக்கக் கூடிய சக்தி கொண்டது. 

    சிகிச்சை:- 

    கடித்த இடத்தையும் அதனை சுற்றிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவும். ரத்த காயங்கள் இருந்தால் அதன் மீது பற்றுத்துணி வைத்து கட்டு போட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்ளவும். 

    நாயை கால் நடை மருத்துவமனையில் ஒப்படைத்தால் அவை அங்கு கவனிக்கப்பட்டு அவை இறந்தவுடன் மூளையை சோதித்து ``ரேபிஸ்'' தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதனால் கடிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதிக அளவு கொண்ட தடுப்பு ஊசி மருத்துவரால் கொடுக்கப்படும். 

    நாசியிலிருந்து ரத்த ஒழுகல்:- 

    வேகமாக மூக்கை சிந்துதல், தும்மல் உண்டாகுதல், அதிக ரத்த அழுத்தம் `ப்ளு' போன்ற காய்ச்சல், அதிக வெப்பமான சூழ்நிலை போன்ற காரணங்களினால் மூக்கின் முன் பக்கத்திலிருந்து விசந்த ரத்தம் ஒழுகும். 

    சிகிச்சை:- 

    உடனே உட்கார வைத்து தலையை முன்பக்கமாக குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக சுவாசிக்க சொல்லவும். பேசுவது, விழுங்குவது, இருமல் உண்டாகுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. மூக்கெலும்பின் கீழ்பாகத்தை கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். 10 நிமிடம் பிறகு விட்டு விட்டவும். அடுத்த 2 மணி நேரத்துக்குள் நாசித்துவாரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். மீண்டு ஒழுகல் ஏற்பட்டால் மருத்துவரை நாடவும். 

    நீரிழிவு வியாதி :- 

    சர்ச்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த சருமம், வேகமான நாடி, கடின சுவாசம், தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும், குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும். வயிற்றில் வலி. 

    சிகிச்சை:- 

    மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். சுயநினைவு இழந்து விட்டால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும். 

    சர்க்கரை குறைந்து விட்டால்:- 

    வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல் வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல் மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்- வாசனை அற்ற சுவாசம். 

    சிகிச்சை:-

    உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்'' கரைத்து குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம்.  

    தகவல்:-சி.எஸ்.குமரகுரு முதல் உதவி- விரிவுரையாளர்/பயிற்சியாளர். தமிழ்நாடு செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top