மீண்டும் டெங்கு! மீள்வது எப்படி? - தமிழர்களின் சிந்தனை களம் மீண்டும் டெங்கு! மீள்வது எப்படி? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, October 16, 2014

    மீண்டும் டெங்கு! மீள்வது எப்படி?

    மிழகம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் மீண்டும் குலைநடுங்க வைத்திருக்கிறது டெங்கு. டெங்கு ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. டெங்குவை எப்படி எதிர்கொள்வது? ராஜபாளையம் பொது மருத்துவர் கு.கணேசன், சென்னை சித்த மருத்துவர் ஜி. சிவராமன், மதுரை ஆயுர்வேத மருத்துவர் ஸ்ரீதேவி ராஜீவ் வாரியார் ஆகியோர் வழிகாட்டுகின்றனர்.
      கொசு தவிர்ப்போம்! பயம் தெளிவோம்!
    மழைக் காலத்தில் சளி, காய்ச்சல் வருவது சகஜம். எல்லாக் காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல. எனவே, காய்ச்சல் வந்தாலே பதற வேண்டியது இல்லை. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்களிலேயே மொத்தம் நான்கு வகைகள் உண்டு. இந்த வைரஸ்களை 'ஏடிஸ் எஜிப்டி’ என்ற வகை கொசுக்களே பரப்புகின்றன. பொழுது விடியும் நேரத்திலும் பொழுது சாயும் நேரத்திலும் இந்தக் கொசுக்களின் வருகை அதிகம் இருக்கும். பகல் நேரத்திலும் இவை கடிக்கும். எனவே, வீட்டைச் சுற்றி கொசுக்கள் உருவாகாத வண்ணம் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, தண்ணீர் தேங்குவதைத் தவிருங்கள். பகலோ, இரவோ... டெங்கு அபாயம் போகும் வரை கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். டெங்கு காய்ச்சல் தும்மல், இருமல் போன்றவை மூலம் பரவக் கூடியது அல்ல. ரத்தம் வழியாக - கொசு வழியாக மட்டுமே பரவக் கூடியது. எனவே, தொற்று வியாதி பயம் தேவையற்றது!
    கொசுவை எப்படித் தவிர்ப்பது?
    சுத்தமான சுற்றுச்சூழல் தவிர, வீட்டுச்சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தல்,  வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளித்தல், மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசால்’ வேதிப் பொருளைப் புகையவிடுதல் ஆகிய நடவடிக்கைகள் கொசுக்களை ஒழிக்க உதவும்! 
    டெங்கு வந்தால் என்ன செய்யும்?
    கொசுக்கள் மூலம் உடலுக்குள் நுழையும் டெங்கு கிருமிகள் 3 முதல் 13 நாட்களுக்குள் பல்கிப் பெருகும். பொதுவாக இவை 5 முதல் 8 நாட்களுக்குள் அறிகுறிகளாக வெளிப்படும். அதிகமான காய்ச்சல் - அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வரையிலான காய்ச்சல் - முதல் அறிகுறி. உடல் சோர்வு எப்போதும் இருக்கும். கூடவே கண் வலி, உடல் வலி, தலை வலி, மூட்டுவலி ஆகியவை கடுமையாக இருக்கும். வாந்தி இருக்கலாம். உடலில் அரிப்பு இருப்பதோடு, சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். உடலில் ரத்தத் தட்டுகள் எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு ஏற்படுத்தும் பெரும் அபாயம். இதற்கான அறிகுறி நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர்ப் பாதை போன்ற இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படுவது. 'எலிசா’ ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் டெங்கு பாதிப்பை உறுதிசெய்யலாம்! 
    சித்தர்கள் அருளிய கொடை!
    சித்த மருத்துவத்தில் டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ள மிகச் சிறந்த நிவாரணிகள் உள்ளன. நிலவேம்பும் ஆடாதொடையும். அனைத்து நாட்டு மருந்துக் கடைகள் மட்டும் இல்லாமல், அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவுகளிலும் நிலவேம்பு நீரும் ஆடாதொடை நீரும் கிடைக்கும். காலை உணவுக்கு முன்பு நிலவேம்புக் குடிநீர் 2 டீ ஸ்பூனை 200 மி.லி. தண்ணீரில் விட்டு, கால் டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடிக்க வேண்டும். இதேபோல, இரவு உணவுக்கு முன்பு ஆடாதொடை நீர் 2 டீ ஸ்பூன் எடுத்து, 200 மி.லி. தண்ணீரில் விட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்க வேண்டும். தினமும் இந்தக் கஷாயத்தை 7 நாட்கள் குடித்துவந்தால் நோய் குணமாகும். கடந்த 2006-ல் சிக்குன்குன்யா நோயால் பாதிக்கப்பட்டபோது, தமிழகம் இந்த நிலவேம்புக் குடிநீர்க் கஷாயத்தின் துணையோடுதான் அந்த நோயை எதிர்கொண்டது என்பது இங்கே  நினைவுகூரத்தக்கது! 
    மழைக்காலத்தை மூலிகை டீயோடு கொண்டாடுங்கள்!
    பொதுவாகவே, மழைக்காலத்தில் நோய்கள் அண்டாமல் இருக்க, மூலிகை டீ உதவியாக இருக்கும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளம் பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள்... இவற்றில் எவை எல்லாம் கிடைக்கிறதோ அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கலாம்
     டெங்கைக் கொல்ல மருந்து என்ன?
    டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கத் தடுப்பு பூசி, மருந்துகள் ஏதும் கிடையாது. அதேபோல, ஆங்கில மருத்துவத்தில் இதற்கெனப் பிரத்யேகமான சிகிச்சையும்  கிடையாது. சாதாரணக் காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகள்தான் டெங்குவுக்கும். ஆனால், சிறப்புக் கவனம் அளிப்பது முக்கியம். உடலில் லட்சக் கணக்கில் உள்ள ரத்தத்தட்டுகளை வெறும் ஆயிரம் என்கிற அளவுக்குக் குறைத்துவிடக் கூடியது டெங்கு. இதனால், நோய் எதிர்ப்புத் திறன் முற்றிலுமாகக் குலைந்து மரணத்தைக் கொண்டுவந்துவிடும். எனவே,  இவர்களுக்கு ரத்தம் செலுத்துதல், ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகள் அவசியம் தேவைப்படும். ஆகவே, துரிதமாகச் செயல்பட வேண்டியது மிக முக்கியம்!
    நல்லாச் சாப்பிடுங்க!
    டெங்கு பெரிய அளவில் பாதிப்பை உருவாக்குவது யாரிடம் தெரியுமா? முதியவர்களிடமும் குழந்தைகளிடமும். காரணம்... நோய் எதிர்ப்புச் சக்தி இவர்களுக்குக் குறைவு. பொதுவாகவே இப்படிப்பட்ட நோய்கள் பரவும்போது, அதை எதிர்கொள்ள நல்ல உணவு முக்கியம். நாட்டுக்கோழி ரசம், நல்லி எலும்பு சூப், பேரீச்சை, முட்டை, பால், காய் - கனிகள்... இஷ்டம்போல வெட்டுங்க பாஸ்!  
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மீண்டும் டெங்கு! மீள்வது எப்படி? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top