அஜீரண பிரச்னைக்கு தீர்வு - தமிழர்களின் சிந்தனை களம் அஜீரண பிரச்னைக்கு தீர்வு - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, October 6, 2014

    அஜீரண பிரச்னைக்கு தீர்வு

    அஜீரண பிரச்னைக்கு தீர்வு

    சாப்பாட்டைப் பற்றி யோசிக்கக் கூட பலருக்கு நேரம் இல்லை. அதுவும் ஒரு கேப்சூலாகக் கிடைத்து விட்டால் நன்றாக இருக்கும். சமைக்க நேரம் இல்லாததால் பேக்டு புட் சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு. பசிக்கலை, மலச்சிக்கல்... இப்படி ஆயிரத்தெட்டு பிரச்னை, எல்லாரது புலம்பலிலும் கட்டாயம் கேட்கலாம். நேரத்துக்கு சாப்பிடுவது மற்றும் போதுமான சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்வது இந்த இரண்டு விஷயத்திலும் கவனம் செலுத்தாதவர்கள் அஜீரணம், அல்சர், கேன்சர் என அடுத்தடுத்து அபாயகட்டங்களைத் தொட வாய்ப்புள்ளது என்கிறார் ஹோமியோபதி மருத்துவர் வி.மு.சசிக்குமார்.
                          
    நாம் சாப்பிடும் உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பைக்கு வந்த உணவு ஜீரணம் ஆக மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை பிடிக்கும். எனவே நான்கு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது. கல்லீரல் மற்றும் கணையத்தில் இருந்து சுரக்கும் பித்தநீர் உணவை செரிக்கச் செய்கிறது. உணவில் பித்தநீர் கலந்ததும் அதிலிருந்து நுரை பொங்கும். அந்த நுரையே உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய்ச் சத்தை ஜீரணிக்கிறது. இவற்றில் ஏற்படும் மாற்றத்தில் ஜீரண வேலைகள் சீராக நடக்காத போது தான் அஜீரண பிரச்னை துவங்குகிறது. உணவு செரிமானத்தில் முக்கிய பணியாற்றுவது பெப்சின், ரெனின் மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலங்களே. இதில் ஏற்படும் மாற்றங்களால் வயிற்றில் அல்சர் உண்டாகிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் சுரப்பு அதிகரித்து ரசாயன முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. இதனால் வயிற்றில் காற்று உருவாகி ஏப்பம் அல்லது புளித்த ஏப்பமாக வெளிப்படுகிறது. அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடுவதால் அதை ஜீரணிக்க ஹைட்ரோ குளோரிக் அதிகமாக சுரக்கும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடாமல் விடுவதால் ஜீரண அமிலங்கள் இரைப்பையில் அல்சரை உண்டாக்குகிறது. உணவுக்குழாய், குடல் மற்றும் குடல் உறிஞ்சிகளை அல்சர் அடுத்தடுத்து பாதிக்கிறது. இதனால் உணவில் இருந்து சத்துகள் உறிஞ்சும் தன்மை குறைகிறது. இதன் அடுத்த கட்டமாக மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிறு உப்புசம், வயிறு மந்த நிலை ஆகியவை ஏற்படுகிறது.

    இது போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் விடுவது தவறு. உடனடியாக மருத்துவரை அணுகி, ஆரம்பத்திலேயே தடுப்பதன் மூலம் அல்சர் மற்றும் அது தொடர்பான பிரச்னைகளையும் தடுக்க முடியும். பாதுகாப்பு முறை: நேரத்துக்கு சாப்பிட வேண்டும்.  உணவை மென்று சாப்பிட வேண்டும். வேகவேகமாக உணவு உட்கொள்வதை தவிர்ப்பது முக்கியம். அடிக்கடி டென்ஷன் ஆகும் மனநிலை உள்ளவர்களுக்கு அடிக்கடி அஜீரண கோளாறு உண்டாகும். இதனால் காலை நேரங்களில் டென்ஷனை குறைக்கும் மூச்சு பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்ளலாம். உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். உணவு சாப்பிடுவதற்கு முன் பழச்சாறு அல்லது காய்கறி சூப் அருந்துவதன் மூலம் ஜீரண சக்தியை அதிகரிக்கலாம்.
    வயிறு முட்ட சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது இரண்டையும் தவிர்க்கவும். சாப்பிட்டவுடன் படுக்ககூடாது. சாப்பிட்டதும் உடற்பயிற்சியோ, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதோ தவறு. நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்துக்காக சோடா போன்ற குளிர்பானங்கள் சாப்பிடுவதால் பிரச்னை அதிகரிக்குமே தவிர குறையாது. மது, சிகரெட் பழக்கம் மற்றும் சூடான உணவுகளை சாப்பிடுவதால் உணவுக்குழாயில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. நெஞ்சு எரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம் போன்ற ஆரம்பகட்ட பிரச்னைகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் பெரிய ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.                    

    ரெசிபி

    பார்லி ஜூஸ்: பார்லி அரிசி 1 கப், இளநீர் 200 மிலி, தேன் கால்கப் எடுத்துக் கொள்ளவும். பார்லி அரிசியை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். ஆறவைத்து அத்துடன் இளநீர், தேன் சேர்த்து பிரிட்ஜில் வைத்து அருந்தலாம். பார்லியில் புரதம் மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ஸ் உள்ளது. இளநீரில் ஊட்டச்சத்தும், தேனில் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.


    முருங்கைக்காய் இட்லி: முருங்கைக்காய் 4 வேகவைத்து உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுத்துக் கொள்ளவும். சோயாபீன்ஸ் ஒரு கப் முதல்நாளே ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் தயிரில் கோதுமை ரவை ஒரு கப் சேர்த்து ஊற விடவும். பச்சை மிளகாய் 2, கொத்தமல்லி, கருவேப்பிலை பொடியாக நறுக்கவும். கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிள காய், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்கி சோயா மாவு, தயிரில் ஊறிய கோதுமை ரவை, முருங்கைக்காய் சதைப்பகுதி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இட்லித்தட்டில் வேகவைத்து எடுக்கவும். இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். வயிற்றுப் புண் விரைவில் ஆறும்.


    மோர் ரசம்: மோர் இரண்டு கப். துவரம்பருப்பு, மிளகு இரண்டும் சேர்த்து ஒரு டீஸ்பூன், வெந்தயம், சீரகம் இரண்டும் சேர்த்து 1/2 டீஸ்பூன், வறமிளகாய் 3 ஆகியவற்றை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மோரில் சேர்த்து கலக்கி சாப்பிடலாம். தினமும் இந்த மோர் ரசத்தை எடுத்துக் கொண்டால் வயிற்றுப் பிரச்னைகள் குணமாகும்.

    டயட்


    அஜீரணக் கோளாறு வயது முதிர்வு மற்றும் உணவு மாற்றத்தால் உண்டாகிறது. வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். காரம், ரசாயனம், வைட்டமின் சி சத்து உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி தவிர்க்கவும். அதிக கொழுப்பு, நார்ச்சத்து உணவுகள் வேண்டாம். இனிப்பையும், உப்பையும் குறைத்துக் கொள்ளவும். எளிதில் ஜீரணம் ஆகும் அரிசி, மைதா, அவல் ஆகியவை சேர்க்கலாம்.  முழு தானியம் மற்றும் முளைக்கட்டிய பயறு தவிர்க்கவும், பூண்டு, மசாலாப் பொருட்களைக் குறைக்கவும். தண்ணீர் அதிகமாகக் குடிக்கவும். மூச்சுப் பயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம். பழங்களை ஜூசாக எடுத்துக் கொள்ளவும். முட்டையின் வெள்ளைக்கரு,  முருங்கை கீரை சூப், குளிர்ச்சியான உணவுகள் அதிகம் சேர்க்கலாம். ராகி, கோதுமை தவிர்க்கவும். சமையலில் எண்ணெய் குறைத்துக் கொள்ளவும். சரியான உணவு முறை மூலம் அஜீரணக் கோளாறால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

    பாட்டி வைத்தியம்

    *  இஞ்சி சாற்றில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
    *  இஞ்சிச்சாறு கொதிக்க வைத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் உணவுக்குப் பின்னர் குடித்தால் பெருத்த வயிறு குறையும்.
    *  தோல் நீக்கப்பட்ட இஞ்சியை உப்பு சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
    *  இஞ்சியுடன் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு சரியாகும்.
    *  எலுமிச்சை பழச்சாறு, வெள்ளரிப்பிஞ்சு, உப்பு மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமா னத் தொல்லைகள் தீரும்.
    *  ஏலக்காய் விதை, ஓமம், சீரகம் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மூன்று வேளையும் உணவுக்குப் பின் மூன்று கிராம் அளவுக்கு சாப்பிட்டால் அஜீரணக்    கோளாறுகள் நீங்கும்.
    *  கடுகு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஜீரணக்கோளாறுகள் சரியாகும்.
    *  சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை கஷாயம் வைத்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: அஜீரண பிரச்னைக்கு தீர்வு Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top